கருந்துளையின் முதல் புகைப்படம் வௌியீடு

உலக வரலாற்றில் முதன்முறையாக கருந்துளையின் முதல் புகைப்படம் வௌியீடு

by Bella Dalima 11-04-2019 | 11:41 AM
Colombo (News 1st) உலக வரலாற்றில் முதன்முறையாக கருந்துளையின் (Black hole) முதல் புகைப்படம் எடுக்கப்பட்டிருப்பதை வானியலாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். அறிவியல் உலகின் பல ஆண்டுக் கனவுத் திட்டம் நிறைவேறியிருக்கிறது. கருந்துளையின் முதல் புகைப்படம் எடுக்கப்பட்டுவிட்டதாக வானியலாளர்கள் அறிவித்துள்ளனர். கருந்துளையின் முதல் புகைப்படத்தை கருந்துளை பற்றி பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்ட ஸ்டீபன் ஹாக்கிங்கிற்கு சமர்ப்பித்துள்ளனர். உலகம் முழுக்க சுமார் 8 தொலைநோக்கிகளைப் பயன்படுத்தி கருந்துளை புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. விர்கோ கேலக்ஸி கிளஸ்டர் அருகில் மெசியர் 87-இன் மத்தியில் மாபெரும் கருந்துளை கண்டறியப்பட்டதாக ஐரோப்பிய தெற்கு ஆய்வகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஆராய்ச்சியாளர்களால் மான்ஸ்டர் என அழைக்கப்படும் இந்த கருந்துளை பூமியில் இருந்து சுமார் 5.5 கோடி ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கிறது. இது சூரியனை விட சுமார் 650 கோடி மடங்கு பெரியதாகும். 12 ஆண்டுகள் வரை காத்திருந்த ஆராய்ச்சியாளர்கள் தற்சமயம் வெற்றிகரமாக கருந்துளையை புகைப்படம் எடுத்திருக்கின்றனர். இத்திட்டத்தில் பயன்படுத்தப்பட்ட Event Horizon Telescope - EHT என்பது உலகம் முழுக்க நிறுவப்பட்டிருக்கும் ரேடியோ டெலஸ்கோப்கள் ஆகும். இவை அனைத்தும் ஒரேமாதிரி இயங்குபவை. இது பூமியின் அளவைக் கொண்டிருக்கிறது. இதனாலேயே கருந்துளையின் நிழலை பதிவு செய்ய முடிந்தது. கருந்துளையின் நிழற்படங்களை எடுப்பதற்கு 5 நாட்கள் தேவைப்பட்ட நிலையில், அதனை ஆராய்வதற்கு 2 ஆண்டுகள் எடுத்திருந்தன. விண்மீன் ஒன்று அதன் எடையில் உள்நோக்கி மோதுவதால், அழிவடையும் விண்மீனின் அளவே கருந்துளையாகும். ஔியைக் கூட உள்ளீர்க்கக்கூடிய ஈர்ப்பு விசை அதன் மத்தியில் வலுவாகி இவ்வாறு கருப்பு நிறமாகக் காட்சியளிப்பது சிறப்பம்சமாகும். அதனை நெருங்கும் அனைத்தையும் உள்ளீர்த்துக்கொள்ளும் அளவு சக்தி வாய்ந்ததாக இது விளங்குகின்றது.