விமான நிலையம் அருகே செல்ஃபி எடுத்தால் மரணதண்டனை

விமான நிலையம் அருகே செல்ஃபி எடுத்தால் மரணதண்டனை: தாய்லாந்து அரசு எச்சரிக்கை

by Bella Dalima 10-04-2019 | 4:30 PM
விமான நிலையம் அருகே செல்ஃபி எடுத்தால் அதிகபட்சம் மரணதண்டனை விதிக்கப்படும் என தாய்லாந்து அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தாய்லாந்தின் மாய் காவோ என்ற கடற்கரை சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு பிரபலமான இடமாக உள்ளது. மாய் காவோவை ஒட்டி விமான நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இதனால் விமானம் ஏறுவதும், இறங்குவதும் தரையிலிருந்து சில அடி உயரத்தில் நடப்பது வழக்கம். இதன் காரணமாக இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் விமானம் பறக்க ஆரம்பிக்கும்போது அருகில் நின்று செல்ஃபி எடுப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தனர். இந்நிலையில், விமானத்தின் என்ஜினில் இருந்து வெளியாகும் அதிவேக காற்றில் சிக்கி சிலர் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதன் காரணமாக மாய் காவோ விமான நிலையம் முன் செல்ஃபி எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்து அரசின் இந்த உத்தரவிற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.