மூன்றாம் இடத்தைப் பிடித்தது தம்புள்ளை அணி

மாகாண அணிகளுக்கு இடையிலான தொடர்: மூன்றாம் இடத்தைப் பிடித்தது தம்புள்ளை அணி

by Staff Writer 10-04-2019 | 9:29 PM
Colombo (News 1st) மாகாண அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரில் தம்புள்ளை அணி மூன்றாமிடத்தைப் பிடித்தது. கண்டி அணிக்கு எதிரான போட்டியில் தம்புள்ளை அணி 94 ஓட்டங்களால் இன்று வெற்றியீட்டியது. மாகாண அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரில் மூன்றாமிடத்திற்கான இந்தப் போட்டி தம்புள்ளை ரங்கிரி சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கண்டி அணித்தலைவர் திமுத் கருணாரத்ன முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தார். தம்புள்ளை அணி சார்பாக பானுக்க ராஜபக்ஸ 87 பந்துகளில் 95 ஓட்டங்களைப் பெற்றார். அபாரமாக துடுப்பெடுத்தாடிய அணித்தலைவர் அஞ்சலோ மெத்யூஸ் 2 சிக்சர்கள் 9 பவுண்டரிகளுடன் சதம் விளாசிய நிலையில், 101 ஓட்டங்களைப் பெற்றார். மத்திய வரிசையில் ஜீவன் மென்டிஸ் ஆட்டமிழக்காமல் 50 ஓட்டங்களையும் இசுரு உதான 34 ஓட்டங்களையும் பெற்றனர். தம்புள்ளை அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 325 ஓட்டங்களைப் பெற்றது. நுவான் பிரதீப் மற்றும் திஸ்ஸர பெரேரா ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். 326 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலளித்தாட களமிறங்கிய கண்டி அணி ஓட்டமின்றிய நிலையில் முதல் விக்கெட்டை இழந்தது. சகலதுறை வீரரான சதீர சமரவிக்ரம 70 ஓட்டங்களையும் சங்கீத் குரே 57 ஓட்டங்களையும் பெற்று வெற்றிக்காக போராடினார்கள். தம்புள்ளை அணியின் அதிசிறப்பான பந்து வீச்சினால் கண்டி அணி 42.2 ஓவர்களில் 231 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது. தனுஷ்க குணதிலக்க , இசுரு உதான , ஜீவன் மென்டிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். உலகக்கிண்ணத்திற்கான இலங்கை குழாத்தை தெரிவு செய்யும் நோக்குடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தத் தொடரின் இறுதிப்போட்டி நாளை (11) நடைபெறவுள்ளது. அந்தப் போட்டியில் கொழும்பு மற்றும் காலி அணிகள் மோதவுள்ளன.