பணம் அனுப்புவதில் இந்தியர்கள் முதலிடம்

வெளிநாடுகளில் இருந்து தாய்நாட்டிற்கு பணம் அனுப்புவதில் இந்தியர்கள் முதலிடம்

by Bella Dalima 09-04-2019 | 4:00 PM
வெளிநாடுகளில் இருந்து தாய்நாட்டிற்கு பணம் அனுப்புவதில் இந்தியர்கள் முதலிடம் பிடித்துள்ளனர். அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் வேலை பார்ப்பவர்கள், தாய்நாட்டில் உள்ள தங்கள் குடும்பத்தினருக்கு பணம் அனுப்புகின்றனர். இவ்வாறு தாய் நாட்டிற்கு பணம் அனுப்புவதில் இந்தியர்கள் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளனர். 2018 ஆம் ஆண்டுத் தரவுகளின் படி, இந்தியர்கள் முதலிடத்தை தக்க வைத்திருப்பதாக உலக வங்கி மதிப்பிட்டுள்ளது. வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் கடந்த ஆண்டில் 79 பில்லியன் டொலர் பணம் அனுப்பியுள்ளனர். இந்தியாவைத் தொடர்ந்து சீனா 2 ஆவது இடத்தில் உள்ளது. வெளிநாடுகளில் உள்ள சீனர்கள் தாய்நாட்டிற்கு 67 பில்லியன் டொலர்கள் அனுப்பியுள்ளனர். மெக்சிகோ 36 பில்லியன் டொலர்களுடன் 3 ஆவது இடத்திலும், பிலிப்பைன்ஸ் 34 பில்லியன் டொலர்களுடன் 4 ஆவது இடத்திலும், எகிப்து 29 பில்லியன் டொலர்களுடன் 5 ஆவது இடத்திலும் உள்ளன. வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் மூலம் இந்தியாவிற்கு பணம் அனுப்பப்படுவது கடந்த மூன்று ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. 2016 ஆம் ஆண்டு 62.7 பில்லியன் டொலர்களும் 2017 ஆம் ஆண்டு 65.3 பில்லியன் டொலர்களும் பணம் அனுப்பப்பட்டுள்ளது.