by Bella Dalima 09-04-2019 | 10:46 PM
Colombo (News 1st) 100 மெகாவாட் மிதக்கும் சூரிய மின்னுற்பத்தி நிலையத்தை நிர்மாணிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், ஜனாதிபதி செயலகத்தில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
மின்சக்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுரேன் பட்டகொட மற்றும் கனேடிய வர்த்தக சபையின் ஆசிய வலய பணிப்பாளர் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.
மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், தொழில்நுட்பம் மற்றும் ஆய்வு, மின்சக்தி அமைச்சரும் இணைந்து இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை தாக்கல் செய்திருந்தனர்.
புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அமைய, மகாவலி வலயங்களுக்கு உட்பட்ட நீர்த்தேக்கங்களில் மிதக்கும் சூரிய மின்னுற்பத்தி நிலையம் நிர்மாணிக்கப்படவுள்ளது.
அதற்கமைய, இந்த வருடம் நவம்பர் மாதத்திற்கு முன்னர், 10 மெகாவாட் மின்சாரத்தை தேசிய மின் கட்டமைப்பில் இணைப்பதற்காக மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தை மையப்படுத்தி இதற்கான முதலாவது செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
சூரிய படலம் மற்றும் மின்சாரத்தை களஞ்சியப்படுத்தக்கூடிய இலத்திரனியல் களஞ்சியசாலையை பயன்படுத்தி, சூரிய சக்தியை களஞ்சியப்படுத்தக்கூடிய செயற்றிட்டமாக கனேடிய சோலார் நிறுவனத்தின் உதவியுடன் இந்த செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.