சட்டவிரோத கேபிள் இணைப்புகளைத் தடுக்க தீர்மானம்

சட்டவிரோத கேபிள் இணைப்புகளைத் தடுக்க யாழ். மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றம்

by Staff Writer 09-04-2019 | 7:42 PM
Colombo (News 1st) யாழ். மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் காணப்படும் சட்டவிரோத கேபிள் தூண்கள் அகற்றப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று சபையில் கண்டனத் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. யாழ். மாநகர சபையின் இன்றைய அமர்வின்போது மாநகர எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத கேபிள் தூண்கள் காணப்படுகின்றமை தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது. பொலிஸார் உட்பட சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு உடனடியாக இந்த கண்டன அறிக்கையை அனுப்புவதாகவும் குறிப்பிட்ட நிறுவனம் உடனடியாக கம்பங்களை அகற்ற வேண்டும் என்ற தீர்மானத்தையும் இன்றைக்கே அனுப்புவதாகவும் யாழ். மாநகர சபை மேயர் இம்மானுவேல் ஆர்னோல்ட் குறிப்பிட்டார். மின்சாரக் கம்பங்களில் பொருத்தப்பட்ட சட்டவிரோத கேபிள் இணைப்புகள் காரணமாக கடந்த வருடம் மே மாதம் 23 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். கேபிள் இணைப்பிலிருந்து பரவிய மின்சாரம் தாக்கியதில் நெல்லியடி - நாவலர்மடம் பகுதியைச் சேர்ந்த தந்தையும், மகனும் உயிரிழந்தனர். கேபிள் இணைப்பினூடாக மின்சாரம் தாக்கியதில் யாழ்பாணம் - ஆஸ்பத்திரி வீதியைச் சேர்ந்த 55 வயதான இராசநாயகம் லீலாவதி என்ற வயோதிபப் பெண் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் உயிரிழந்தார்.