மேலதிக வீதிகளை அமுல்படுத்த நடவடிக்கை

அதிவேக நெடுஞ்சாலைகளில் மேலதிக வீதிகளை அமுல்படுத்த நடவடிக்கை

by Staff Writer 09-04-2019 | 8:44 AM
Colombo (News 1st) பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அதிவேக நெடுஞ்சாலைகளில், உள்நுழைவுகள் மற்றும் வௌியேற்றங்களுக்காக மேலதிக வீதிகளை அமுல்படுத்துவதற்கு, வீதி அபிவிருத்தி அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. இதேவேளை, ஒரு மணித்தியாலத்தில் உள்நுழையும் மற்றும் வௌியேறும் வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் உத்தேசித்துள்ளதாக அதிவேக வீதியின் நடவடிக்கை மற்றும் முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் எஸ். ஓப்பநாயக்க தெரிவித்துள்ளார். பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அதிவேக நெடுஞ்சாலைகளின் பயன்பாடு அதிகரிக்கும் என்பதை கருத்திற்கொண்டு இந்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். அத்துடன், இந்தப் பண்டிகைக் காலத்தில் முக்கியமாக நுழைவாயில்கள் மற்றும் வௌியேறும் வாயில்களில் அதிக போக்குவரத்து நெரிசல் நிலவும் வாய்ப்புள்ளதாகவும் அவற்றை சீராக்குவதற்கே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதிவேக மார்க்க போக்குவரத்து பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார். தற்போது ஒரு மணித்தியாலத்தில் ஒரு நுழைவாயிலில் நுழையும் வாகனங்களின் எண்ணிக்கை 240 ஆக காணப்படுவதாகவும் அவற்றை 360 ஆக அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.