பொலிஸ் உத்தியோகத்தர்களின் விளக்கமறியல் நீடிப்பு

ரத்கம வர்த்தகர்கள் கொலை: பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

by Staff Writer 08-04-2019 | 5:08 PM
Colombo (News 1st) ரத்கம வர்த்தகர்கள் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட தென் மாகாண விசேட விசாரணைப் பிரிவின் 15 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட 17 சந்தேகநபர்களும் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். காலி பிரதம நிதவான் ஹர்ஷன கெக்குனுவெல முன்னிலையில் சந்தேகநபர்களை ஆஜர்படுத்தியதை அடுத்து, இந்த விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் சார்பில் மன்றில் இன்று ஆஜராகிய அரசதரப்பு சட்டத்தரணி, சம்பவம் தொடர்பில் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து நீண்ட தௌிவுபடுத்லொன்றை மன்றில் மேற்கொண்டிருந்தார். அதேநேரம், இந்தச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து சந்தேகநபர்களும் இந்த கொலையுடன் தொடர்புடையவர்கள் என தெரியவந்துள்ளதாக, அரசதரப்பு சட்டத்தரணி தமது தௌிவுபடுத்தலினூடாக தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, அவர்களுக்கு பிணை வழங்குவதை எதிர்ப்பதாகவும் அரசதரப்பு சட்டத்தரணி கூறியுள்ளார். இதேவேளை, இந்த குற்றச்செயலுக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் வாகனத்தை விடுவிக்குமாறு பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கும் அரசதரப்பு சட்டத்தரணி எதிர்ப்பை வௌியிட்டுள்ளார். குறித்த வாகனம் தொடர்பில் அரச பகுப்பாய்வாளரின் அறிக்கை இதுவரை கிடைக்காமையால் அதனை விடுவிக்க முடியாது என அரசதரப்பு சட்டத்தரணி மன்றுக்கு அறிவித்துள்ளார். அரச பகுப்பாய்வாளரின் அறிக்கை கிடைத்ததன் பின்னர் வாகனத்தை விடுவிப்பதற்கு தாம் இணக்கம் தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். ரத்கம பகுதியில் வசித்த வர்த்தகர்கள் இருவர் கடந்த ஜனவரி மாதம் 23 ஆம் திகதி கடத்தப்பட்டு பின்னர் எரியூட்டி கொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.