சித்திரைக்கு ரயில் ஊழியர்களின் சேவையில் மாற்றம்

சித்திரையை முன்னிட்டு ரயில்வே திணைக்கள ஊழியர்களின் விடுமறைகள் மட்டுப்படுத்தப்படவுள்ளது.

by Fazlullah Mubarak 08-04-2019 | 7:56 AM

தமிழ் சிங்கள புதுவருடப்பிறப்பை முன்னிட்டு இன்று (8ஆம் திகதி) முதல் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை, இலங்கை ​போக்குவரத்து சபை மற்றும் ரயில்வே திணைக்கள ஊழியர்களின் விடுமுறைகள் மட்டுப்படுத்தப்படவுள்ளதாக, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இன்று முதல் இலங்கை போக்குவரத்து சபை மேலதிக பஸ் மற்றும் ரயில் சேவைகளை முன்னெடுக்க உத்தேசித்துள்ளதாக அமைச்சின் செயலாளர் எல்.பீ. ஜயம்பதி தெரிவித்துள்ளார். இதற்கிணங்க, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமாக ஆயிரத்துக்கும் அதிகமான பஸ்களும் 20 ரயில்களும் மேலதிகமாக சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன. இதேவேளை, பயணிகளின் தேவைகருதி குறுந்தூர பஸ்களை தூரப்போக்குவரத்தில் ஈடுபடுத்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக போக்குவரத்து அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். இன்று முதல் எதிர்வரும் 21 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் போக்குவரத்து நடவடிக்கைகளை முறையாக முன்னெடுப்பதற்காக ஒன்றிணைந்த நடவடிக்கை பிரிவொன்றை ஸ்தாபிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.