புதுக்குடியிருப்பில் ஹெரோயின் கடத்தல்: பெண் கைது

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்ட பெண் உட்பட இருவர் கைது

by Staff Writer 07-04-2019 | 11:21 AM
Colombo (News 1st) முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்ட பெண்னொருவர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சந்தேகநபர்கள் நேற்று (6ஆம் திகதி) மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதன்போது கைது செய்யப்பட்ட ஆண் சந்தேகநபரிடமிருந்து ஒரு கிராம் 860 மில்லிகிராம் ஹெரோயின், ஹெரோயின் வியாபாரத்தில் திரட்டிய 12,000 ரூபா பணம் மற்றும் 4 கையடக்கத் தொலைபேசிகள் என்பனவும் பெண் சந்தேகநபரிடமிருந்து 630 மில்லிகிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளன. மன்னார் - சிலாவத்துறை பகுதியைச் சேர்ந்த 44 வயதான ஆண் ஒருவரும் யாழ். சுன்னாகத்தைச் சேர்ந்த 32 வயதான பெண் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து, குறித்த சந்தேகநபர்களை முல்லைத்தீவு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை, ஹெரோயின் கடத்தலில் ஈடுபடும் சந்தேகநபர் ஒருவர் குருநாகல் - குளியாபிட்டி நகரில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சந்தேகநபரிடமிருந்து 251 கிராம் 400 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவினரால் நேற்றிரவு முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். முத்தெட்டுவேகம பகுதியைச் சேர்ந்த 36 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் சந்தேகநபரை குளியாபிட்டி நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.