ஔடதங்கள் அதிகார சபை தலைவருக்கு அழைப்பாணை

தரம் குறைந்த தடுப்பூசிகள் இறக்குமதி: தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை தலைவருக்கு அழைப்பாணை

by Staff Writer 06-04-2019 | 4:19 PM
Colombo (News 1st) புற்றுநோயாளர்களுக்கு தரம் குறைந்த மற்றும் அதிக விலையிலான தடுப்பூசிகளை ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்தமை தொடர்பில் சாட்சியமளிப்பதற்காக எதிர்வரும் 09 ஆம் திகதி ஊழல் விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தற்போதைய தலைவருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி இறக்குமதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படும் 2015 - 2018 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கடமையில் இருந்த தலைவரையும் அன்றைய தினம் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஆணைக்குழுவிற்குக் கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகள் தொடர்பான விசாரணை நேற்று (05) ஆரம்பமானது. இதன்போது, புற்றுநோயாளர்களுக்கு தரம் குறைந்த மற்றும் அதிகூடிய விலையில் ரஷ்யாவில் இருந்து தடுப்பூசிகளை இறக்குமதி செய்தமை தொடர்பில் சாட்சியமளித்த தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் மருந்தாளர், தடுப்பூசி இறக்குமதி தொடர்பிலான மதிப்பீட்டு அறிக்கையைத் தயாரித்த நபரே அதிகார சபையின் தலைவராக பின்னர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.