கிளிநொச்சியில் கைதானவர்களுக்கு விளக்கமறியல்

கனடா செல்ல முயன்று கிளிநொச்சியில் கைதானவர்களுக்கு 10 ஆம் திகதி வரை விளக்கமறியல்

by Staff Writer 06-04-2019 | 8:35 PM
Colombo (News 1st) சட்டவிரோதமாக கனடா செல்ல முயன்ற குற்றச்சாட்டில் கிளிநொச்சியில் நேற்று (05) கைது செய்யப்பட்டவர்கள் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி - கனகபுரம் பகுதியில் வைத்து இவர்கள் பொலிஸாரினால் நேற்று கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 26 பேரும் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தின் பதில் நீதவான் எஸ்.சிவபாலசுப்பிரமணியம் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து 23 பேரையும் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இவர்களில் மூன்று சிறுவர்களை சிறுவர் நன்னடத்தை பிரிவில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. முகவர் ஒருவரினூடாக கனடா செல்வதற்காக கனகபுரம் பகுதியிலுள்ள வீடொன்றில் தங்கியிருந்த நிலையில், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இவர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.