மைத்திரி, மஹிந்த தலைமையிலான கலந்துரையாடல் இன்று

வரவுசெலவுத் திட்டம் குறித்த இறுதித் தீர்மானம்: ஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவர் தலைமையில் கலந்துரையாடல்

by Staff Writer 04-04-2019 | 7:00 AM
Colombo (News 1st) 2019 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நாளை (5ஆம் திகதி) இடம்பெறவுள்ளது. அது தொடர்பிலான இறுதித் தீர்மானம் எடுப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோரின் தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று (4ஆம் திகதிக) மாலை 4 மணியளவில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இந்தக் கலந்துரையாடலில், எதிர்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்ளவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஷாந்த பண்டார குறிப்பிட்டுள்ளார். இதேநேரம், இந்த வரவுசெலவுத் திட்டத்திற்கு தாம் ஒருபோதும் ஆதரவு தெரிவிக்கப்போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார். எவ்வாறாயினும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பானது, ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதால் அரசாங்கத்திற்குத் தேவையான வாக்குகள் கிடைக்கும் என்பதே உண்மை எனவும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஷாந்த பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.