by Staff Writer 04-04-2019 | 3:35 PM
Colombo (News 1st) ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை, குறுகிய காலத்திற்குள் நிறைவு செய்வது தொடர்பில் இரு தரப்பினரும் ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாட்டை எதிர்வரும் 24 ஆம் திகதி மன்றுக்கு அறிவிக்குமாறு இன்று உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விக்கும் களுவாராச்சி இந்த உத்தரவை சட்ட மா அதிபர் மற்றும் திஸ்ஸ அத்தநாயக்க ஆகியோருக்கு இன்று பிறப்பித்துள்ளார்.
முறைப்பாட்டின் முதலாம் மற்றும் இரண்டாம் சாட்சியாளர்களான பிரதமர் மற்றும் ஜனாதிபதியின் சட்டத்தரணிகள், இந்த வழக்கை இணக்கப்பாட்டுடன் முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பில் சட்ட மா அதிபருக்கு அறிவித்துள்ளனர்.
பிரதிவாதியான திஸ்ஸ அத்தநாயக்க, இந்த சம்பவத்தை ஏற்று, மன்னிப்புக் கோருவாராயின், வழக்கை நிறைவு செய்வதற்கு தயார் என மனுவின் சாட்சியாளர்கள் சட்ட மா அதிபருக்கு அறிவித்துள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலிப பீரிஸ், மன்றுக்கு அறிவித்துள்ளார்.
இதேவேளை, பிரதிவாதியான திஸ்ஸ அத்தநாயக்க சார்பில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்திரதிஸ்ஸ, தமது கட்சிக்காரருடன் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடி முறைப்பாட்டாளர்களால் சட்ட மா அதிபருக்கு அறிவித்துள்ளமைக்கு அமைய, வழக்கை குறுகிய காலப்பகுதிக்குள் நிறைவு செய்வதற்கு கால அவகாசம் கோரியிருந்தார்.