அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் தோற்கடிக்கப்பட்டது சதியா?

by Staff Writer 02-04-2019 | 8:20 PM
Colombo (News 1st) அமைச்சர்களான வஜிர அபேவர்தன மற்றும் சம்பிக்க ரணவக்க ஆகியோரின் அமைச்சுகளுக்கான சில நிதி ஒதுக்கீடுகள் பாராளுமன்றத்தில் அண்மையில் தோற்கடிக்கப்பட்டன. சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவின் கருத்திற்கு அமைய, நிதி ஒதுக்கீடு தோற்கடிக்கப்பட்டமைக்கான காரணம் சூழ்ச்சியொன்றின் பெறுபேறாகும். அரசாங்கம் தமது கடமைகளை நிறைவேற்றுவதில் தோல்வியடைந்துள்ளமையின் பிரதிபலிப்பே, நிதி ஒதுக்கீடு தோற்கடிக்கப்பட்டமைக்கான காரணம் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ ''த ஐலன்ட்'' பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார். வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவது அரசாங்கத்தின் பொறுப்பு எனவும், அதனை தோற்கடிப்பது எதிர்க்கட்சியின் கடமை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார். அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க மற்றும் வஜிர அபேவர்தன ஆகியோர் தொடர்பான, ஆளுங்கட்சி உறுப்பினர்களின் அதிருப்தியின் பிரதிபலிப்பே இதுவெனவும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இது ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளக நெருக்கடி எனவும் அமைச்சர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையே மோதலொன்று இருப்பதாகவும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டார். நிதி ஒதுக்கீடு தோற்கடிக்கப்பட்டமை அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல கூறுவதைப் போன்று சூழ்ச்சியொன்றா? ஆளுங்கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் தலைமைத்துவத்திற்கு வழங்கிய தகவலா? இல்லை எனின், ஆளுங்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தலைமைத்துவத்திற்கு வழங்கிய எச்சரிக்கையா?