சுப்பர்கிங்ஸின் அபார வெற்றி - மண்டியிட்ட ராஜஸ்தான்

சுப்பர் கிங்ஸின் அபார வெற்றி - மண்டியிட்ட ராஜஸ்தான்

by Fazlullah Mubarak 01-04-2019 | 8:41 AM

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 8 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்தப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 27 ஓட்டங்களுக்கு முதல் 3 விக்கெட்களையும் இழந்தது. ஐந்தாமிலக்கத்தில் களமிறங்கிய அணித்தலைவர் மஹேந்திரசிங் தோனி 4 சிக்சர்கள் 4 பவுன்டரிகளுடன் 46 பந்துகளில் 76 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் விளாசினார். சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 175 ஓட்டங்களை பெற்றது. 176 ஓட்டங்களை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியும் ஆரம்பத்தில் விக்கெட்களை இழந்து சிரமத்துக்குள்ளானது. 95 ஓட்டங்களுக்குள் முதல் 5 விக்கெட்களையும் இழந்து தடுமாற்றத்துக்குள்ளான ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை , வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும் முயற்சியில் பென் ஸ்டோக்ஸ் செயற்பட்டார். கடைசி ஓவரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் வெற்றிக்கு 12 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரின் முதல் பந்திலேயே பென் ஸ்டோக்ஸ் 46 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி உறுதியானது. கடைசி ஓவரில் 4 ஓட்டங்களை மாத்திரமே டுவைன் ப்ராவே விட்டுக் கொடுத்தார். ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 167 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.