சா/தரம்: உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழ் நாளை முதல்

சா/த பரீட்சையின் உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழ் வழங்கும் நடவடிக்கை நாளை ஆரம்பம்

by Staff Writer 31-03-2019 | 1:50 PM
Colombo (News 1st) கல்விப் பொதுத்தராதர சாதாரணத்தரப் பரீட்சை பெறுபேற்றின் உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழை வழங்கும் நடவடிக்கைகள் நாளை (முதலாம் திகதி) ஆரம்பமாகவுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சைகள் திணைக்களத்திற்கு வருகைதந்து உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழை பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் சனத் பி பூஜித குறிப்பிட்டுள்ளார். இதேநேரம், சான்றிதல் ஒன்றுக்கு 600 ரூபா கட்டணம் அறவிடப்படும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான மீள் பரிசீலனை விண்ணப்பங்கள் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பாடசாலை பரீட்சார்த்திகள் பாடசாலை அதிபர்களின் ஊடாகவும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள், அதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும் எனவும் திணைக்களம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தடவை நடைபெற்ற சாதாரண தரப்பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய, பரீட்சைக்கு தோற்றிய பரீட்சார்த்திகளில் 71.66 வீதமானோர் உயர்தரத்திற்கு சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.