by Staff Writer 30-03-2019 | 3:45 PM
Colombo (News 1st) துபாய் அரசாங்கத்தினால் நாடு கடத்தப்பட்ட நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட கஞ்சிப்பானை இம்ரான் என அழைக்கப்படும் மொஹமட் நஜீம் மொஹமட் இம்ரான் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் அவர் தொடர்ந்தும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டார்.
விசாரணைகளின் பின்னர் அன்டர்சன் பெர்னாண்டோ விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கூறினார்.
கைது செய்யப்பட்ட நால்வரில் ஜங்கா எனப்படும் அனுஷ்க கௌஷால் எனும் சந்தேகநபர் பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடையவர் என அடையாளங்காணப்பட்டுள்ளதால், அவரை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியதன் பின்னர் ஏப்ரல் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கூறினார்.
கைது செய்யப்பட்ட மற்றுமொரு சந்தேகநபரான அமில சம்பத்தை ரொட்டும்ப பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதுடன், ஏப்ரல் 2 ஆம் திகதி வரை அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
துபாயில் கைது செய்யப்பட்டவர்களில் இதுவரை 6 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.