வெப்பமான வானிலை தொடரும் அபாயம்

வெப்பமான வானிலை தொடரும் அபாயம்

by Staff Writer 28-03-2019 | 8:54 AM
Colombo (News 1st) நிலவும் அதிகரித்த வெப்பத்துடனான வானிலை மேலும் அதிகரிக்கும் சாத்தியமுள்ளதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வட மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், மன்னார், ஹம்பாந்தோட்டை, மொனராகலை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களிலும் அதிக வெப்பத்துடனான வானிலை நிலவும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, நீர்ப் பற்றாக்குறை காணப்படும் பகுதிகளில் தொடர்ச்சியாக நீர் விநியோகிகப்படுவதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. வெப்பமான இந்தக் காலநிலையில் அதிகளவில் நீரருந்துவது நன்மை பயக்கும் விடயமாகும் என, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார். அத்தோடு, பொதுமக்களை அவதானமாக செயற்படுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், இந்த விடயம் தொடர்பில் சுகாதாரத் தரப்பினரிடம் இருந்து ஆலோசனைகளை 011 7446491 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்வதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம் எனவும் நீர்ப்பற்றாக்குறை காணப்படுமாயின் 117 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு முறையிட முடியும் எனவும் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, வெப்பமான காலநிலை காரணமாக பல மாவட்டங்களிலும் நீர்த்தட்டுப்பாடு காணப்படுகின்றமையால், நீரைச் சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொள்வதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி கூறியுள்ளார்.