பள்ளியாவத்தை பகுதியில் 'பெராமுல்லே சமீர' உள்ளிட்ட நால்வர் கைது

by Staff Writer 28-03-2019 | 12:22 PM
Colombo (News 1st) வத்தளை - ஹெந்தல, பள்ளியாவத்தை பகுதியில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என கூறப்படும் பாதாள உலகக்குழுவின் உறுப்பினரான 'பெராமுல்லே சமீர' என அழைக்கப்படும் வர்ணகுலசூரியகே மதுரங்க உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சந்தேகநபர்களிடமிருந்து 106 கிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, 5 கையடக்க தொலைபேசிகள், போதைப்பொருள் விற்பனையில் பெறப்பட்ட 25,890 ரூபா பணம் ஆகியன பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வத்தளை - ஹேக்கித்த பகுதியில் காரொன்றில் பயணித்த இருவரை சுட்டுக்கொலை செய்வதற்குத் திட்டமிட்டதுடன், அதற்கு தேவையான துப்பாக்கிகளையும் விநியோகிக்கும் முகவர்களாக சந்தேகநபர்கள் செயற்பட்டுள்ளமை விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் 13 ஆம் திகதி குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றமை நினைவுகூரத்தக்கது. கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள், மேலதிக விசாரணைகளுக்காக திட்டமிட்ட குற்றச்செயல்களை தடுக்கும் விசாரணை பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிற்கு தப்பிச்சென்றுள்ள 'கிம்புலாஎல குண' என்றழைக்கப்படும் பாதாள உலகக்குழுவின் தலைவருடைய உதவியாளர்களே வத்தளை - பள்ளியாவத்த பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.