கூட்டத்தில் லொறி புகுந்து விபத்து: 30 பேர் பலி

குவாத்தமாலாவில் மக்கள் கூட்டத்திற்குள் லொறி புகுந்து விபத்து: 30 பேர் பலி, 17 பேர் படுகாயம்

by Bella Dalima 28-03-2019 | 4:44 PM
குவாத்தமாலா நாட்டில் நகராட்சி அலுவலகம் ஒன்றின் அருகே திரண்டிருந்த மக்கள் கூட்டத்திற்குள் லொறி புகுந்ததால் 30 பேர் பலியாகியுள்ளதுடன், 17 பேர் படுகாயமடைந்துள்ளனர். மத்திய அமெரிக்க நாடான குவாத்தமாலாவில் உள்ள நகுவாலா பகுதியில் நேற்றிரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. அதிவேகமாக வந்த லொறி ஒன்று திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டினை இழந்து, மக்கள் கூட்டத்தில் புகுந்துள்ளது. நகராட்சி அலுவலகம் அருகே நடந்த இந்த விபத்தில் சிக்கிய பலர் உடல் உறுப்புகள் சிதைந்த நிலையில் இரத்த வெள்ளத்தில் சரிந்தனர். உடனடியாக அவர்கள் அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், குவாத்தமாலா அதிபர் ஜிம்மி மொரால்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இந்த கோர சம்பவத்தை நினைத்து மிகவும் வருந்தினேன். இந்த விபத்தில் 30 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இவர்களின் குடும்பங்களுக்கு நாங்கள் தேவையான உதவிகளை செய்துகொண்டிருக்கிறோம். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’ என பதிவிட்டுள்ளார். இவ்விபத்திற்கு 3 நாள் துக்கதினம் அனுசரிக்கப்படும் என குவாத்தமாலா அரசு அறிவித்துள்ளது.