ஹம்பந்தோட்டை எரிபொருள் சுத்திகரிப்பு செயற்றிட்டம் நிதி தூய்தாக்கலுக்கு வழிவகுக்கும்: டிரான்ஸ்பெரன்ஸி இன்டர்நெஷனல்

by Staff Writer 27-03-2019 | 3:57 PM
Colombo (News 1st) ஹம்பந்தோட்டை எரிபொருள் சுத்திகரிப்பு செயற்றிட்டத்தின் ஊடாக நிதி தூய்தாக்கல் இடம்பெறுவதற்கான சந்தர்ப்பம் காணப்படுவதாக டிரான்ஸ்பெரன்ஸி இன்டர்நெஷனல் நிறுவனம் தெரிவித்துள்ளது . அறிக்கை ஒன்றின் ஊடாக டிரான்ஸ்பெரன்ஸி இன்டர்நெஷனல் நிறுவனம் இந்த விடயத்தை அறிவித்துள்ளது. சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள உத்தேச ஹம்பாந்தோட்டை - மிரிஜ்ஜவில எரிபொருள் சுத்திகரிப்பு செயற்றிட்டத்தின் ஊடாக இலங்கையில் நிதி தூய்தாக்கலை செய்வதற்கான  சந்தர்ப்பம் காணப்படுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த செயற்றிட்டத்தின் பிரதான முதலீட்டாளரான சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட Investment Vehicle Silver Park International PTE Ltd  எனும் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதி ஒருவரது நிறுவனம் என டிரான்ஸ்பெரன்ஸி இன்டர்நெஷனல் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த முதலீட்டாளரான தமிழகத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சரான டொக்டர் எஸ். ஜெகரட்சகன் மீது பல்வேறு ஊழல் மோசடிகள் தொடர்பில் குற்றச்சாட்டுகள் உள்ளதாக ஏற்கனவே ஊடகங்களில் செய்திகள் வௌிவந்துள்ளன. இதன் காரணமாக குறித்த நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் அரசியல் ரீதியாக எவ்வித ஊழல் மோசடிகளிலும் ஈடுபட்டுள்ளனரா என்பது தொடர்பில் இலங்கை முதலீட்டு சபை ஆராய வேண்டும் எனவும் டிரான்ஸ்பெரன்ஸி இன்டர்நெஷனல் நிறுவனம் அறிவித்துள்ளது.