பொருத்தமில்லாதவர்களே நாட்டை நிர்வகிக்கின்றனர்

மரண சடங்குகளை நடத்தும் சங்கங்களுக்கு கூட பொருத்தமில்லாதவர்களே நாட்டை நிர்வகிக்கின்றனர்: அனுரகுமார

by Bella Dalima 27-03-2019 | 7:12 PM
Colombo (News 1st) கிராமங்களில் மரண சடங்குகளை மேற்கொள்ளும் சங்கங்களுக்கு கூட பொருத்தமில்லாதவர்களே இந்நாட்டை நிர்வகிப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். முறிகள் மோசடியின் பிரதான சூத்திரதாரியும் அதனை வழிநடத்தியவரும் ரணில் விக்ரமசிங்க என்பதால், அவரால் திருட்டுச் சம்பவங்கள் நிறுத்தப்படும் என எதிர்பார்க்க வேண்டாம் என அனுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டார். முறிகள் மோசடியில் மத்திய வங்கி மற்றும் பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் எனும் இரண்டு பக்கங்கள் உள்ள போதும், பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் எனும் தனியார் நிறுவனம் தொடர்பில் மாத்திரமே விசாரணைகள் இடம்பெறுவதாக அனுரகுமார சுட்டிக்காட்டினார். பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவன பணிப்பாளர் ரஞ்சன் உலுகல்லவை கைது செய்வதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் அவரை பின்தொடர்ந்த போது, அவர் அலரி மாளிகைக்கே செல்ல முற்பட்டதாகவும் சரியான நேரத்தில் கொம்பனித்தெரு வீதியின் ரயில் கடவை மூடப்பட்டதால் அவரைக் கைது செய்ய முடிந்ததாகவும் அனுரகுமார மேலும் தெரிவித்தார். அரச வீட்டிற்கே திருடன் செல்ல முயன்றதால், ரணில் விக்ரமசிங்க திருடன் இல்லையா எனவும் அவர் கேள்வி எழுப்பினார். மக்கள் விடுதலை முன்னணியின் தம்புள்ளை தொகுதிக் கூட்டத்தில் கலந்துகொண்டபோதே அவர் இவ்விடயங்களைக் குறிப்பிட்டார்.