அசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணாக தீபிகா

அசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடிக்கும் தீபிகா படுகோன்

by Bella Dalima 26-03-2019 | 3:49 PM
டெல்லியில் அசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட லட்சுமி அகர்வாலின் வாழ்க்கைப் படத்தில் நடிக்கும் தீபிகா படுகோனின் தோற்றம் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. டெல்லியில் 2005 ஆம் ஆண்டு பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த லட்சுமி அகர்வால் என்ற பெண் மீது அசிட் வீசப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலுக்கு உள்ளானபோது லட்சுமி அகர்வாலுக்கு வயது 15. அவரை வாலிபர் ஒருவர் பின்தொடர்ந்து தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி தொல்லை கொடுத்து வந்தார். அதை ஏற்காததால் லட்சுமி மீது திராவகத்தை வீசினார். இதில் லட்சுமி முகம் சீரழிந்து, தீவிர சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்தார். தற்போது புதிய அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கி திராவக வீச்சில் பாதிக்கப்படுவோருக்காக அவர் குரல் கொடுத்து வருகிறார். இந்த சம்பவத்திற்கு பிறகு திராவகம் விற்பதை ஒழுங்குபடுத்தியும், திராவகம் வீசுவோருக்கு அதிக தண்டனையை அறிவித்தும் இந்திய உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. தற்போது லட்சுமி அகர்வாலின் வாழ்க்கை திரைப்படமாக தயாராகிறது. இதில் அவரது வேடத்தில் தீபிகா படுகோனே நடிக்கிறார். கதையைக் கேட்டதும் மனதைப் பாதித்தது. இந்த படம் பெண்களுக்கு எதிரான வன்முறையை சித்தரிப்பது மட்டுமின்றி அவர்களின் கருணை, பலம், நம்பிக்கை உள்ளிட்ட விடயங்களையும் மையப்படுத்துவதாக இருக்கும் என தீபிகா கூறியுள்ளார். இந்த படத்தில் நடிக்கும் தனது முதல் தோற்றத்தை தீபிகா படுகோனே ட்விட்டரில் வெளியிட்டு, ‘எனது சினிமா வாழ்க்கை பயணத்தில் மறக்க முடியாத ஒரு கதாபாத்திரம்’ என்று பதிவிட்டுள்ளார். மேக்னா குல்சார் இயக்கும் இந்த படம் 2020 ஜனவரி 10 ஆம் திகதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.