by Staff Writer 23-03-2019 | 5:43 PM
Colombo (News 1st) இலங்கையின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்க இம்முறை IPL இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் சில போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள சுப்பர் லீக் கிரிக்கெட் தொடரில் லசித் மாலிங்க விளையாடவுள்ளமையே அதற்குக் காரணம்.
உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடருக்கான இலங்கையின் இறுதிக் குழாத்தை தெரிவு செய்வதற்காக சுப்பர் லீக் ஒருநாள் தொடரை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
இந்தத் தொடர் எதிர்வரும் 4 ஆம் திகதி ஆரம்பமாகி 11 ஆம் திகதி வரை நீடிக்கவுள்ளது.
தொடரில் நான்கு அணிகள் மோதுவதுடன், காலி அணியின் தலைவராக லசித் மாலிங்க செயற்படுகிறார்.
இதனிடையே செல்வம் கொழிக்கும் தொடரான IPL இருபதுக்கு 20 தொடர் இன்று ஆரம்பமாகியது.
இதனால் கடந்த வருடங்களில் மும்பை இன்டியன்ஸ் அணியின் முக்கிய வீரராகக் திகழ்ந்த மாலிங்கவினால் இந்த முறை தமது பங்களிப்பை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
உலகக் கிண்ணத் தொடருக்கான இலங்கை குழாத்தில் மாலிங்க இடம்பெறும் பட்சத்தில், விசேட பயிற்சிக்குழாம் அமைக்கப்பட்டால் அதிலும் பங்கேற்க வேண்டிய சூழல் அவருக்கு ஏற்படும்.
இது குறித்து மும்பை இன்டியன்ஸ் அணிக்கு அறிவித்துள்ள லசித் மாலிங்க, தனக்கு பதிலாக மாற்று வீரரை தெரிவு செய்வது சிறந்தது என தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அடுத்த வருடம் உலக இருபதுக்கு 20 தொடருடன் லசித் மாலிங்க ஓய்வுபெறத் தீர்மானித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.