மாகாண சபை அதிகாரத்தைப் பறிக்க விஜயகலா முயற்சி: சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றச்சாட்டு

by Bella Dalima 23-03-2019 | 8:05 PM
Colombo (News 1st) மாகாண சபையின் அதிகாரத்தைப் பறிப்பதற்கு கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் முயல்வதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றச்சாட்டு முன்வைத்தார். 8 பாடசாலைகளை தேசிய பாடசாலையாக மாற்றுமாறு கோரி ஆளுநருக்கு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஏற்கனவே 22 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக இருப்பதாகவும் சுரேஸ் பிரேமச்சந்திரன் சுட்டிக்காட்டினார். இந்நிலையில், மாகாணத்திற்கு கொடுக்கப்பட்ட பாடசாலைகளை மத்திய அரசாங்கத்திற்கு மீண்டும் கொடுப்பது என்பது மாகாணத்திற்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தை மீண்டும் மத்திக்கு கொடுக்கின்ற மிக மோசமான செயற்பாடு என அவர் குறிப்பிட்டார். இச்செயற்பாடு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும் சுரேஸ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தினார். குறித்த 8 பாடசாலைகளையும் தேசிய பாடசாலைகளாக்குமாறு கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கையொப்பமிட்டு ஆளுநருக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளதாகவும் சுரேஸ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டார். யாழ்ப்பாணத்தில் இன்று அவர் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்விடயங்களைக் குறிப்பிட்டார்.