by Staff Writer 23-03-2019 | 4:15 PM
Colombo (News 1st) யாழ். அல்லைப்பிட்டியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த டிப்பர் வாகனம், மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
21 வயதான இளைஞரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, உயிரிழந்த இளைஞரின் வீட்டினுள் அடையாளந்தெரியாதோர் நுழைந்து கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
யாழ் - அளவெட்டி பகுதியிலுள்ள அவரின் வீட்டிற்குள் நுழைந்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், பெறுமதி வாய்ந்த பொருட்களும் கொள்ளையிடப்பட்டுள்ளன.
இன்று அதிகாலை அடையாளந்தெரியாத சிலர் வீட்டினுள் புகுந்து, உயிரிழந்த இளைஞரின் தந்தை மற்றும் சகோதரனைத் தாக்கியுள்ளனர்.
காயங்களுக்குள்ளான அவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தெல்லிப்பளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.