அமைதிப் போராட்டம் மீதான தாக்குதல் வேதனையளிப்பதாக புத்தளம் பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் தெரிவிப்பு

by Staff Writer 23-03-2019 | 8:55 PM
Colombo (News 1st) புத்தளம் அருவக்காட்டில் குப்பை கொட்டுவதற்கு எதிரான மக்களின் அமைதிப் போராட்டம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு புத்தளம் பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் கவலை தெரிவித்துள்ளது. ஜனாதிபதியை சந்திப்பதற்கு சந்தர்ப்பத்தை கோரி அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது பாதுகாப்புத் தரப்பினர் நடத்திய தாக்குதல் வேதனையளிப்பதாக புத்தளம் மொஹிதீன் ஹும் ஆ மஸ்ஜித் பெரிய பள்ளிவாசல் தெரிவித்துள்ளது. இன, மத, பால் வேறுபாடின்றி பல தியாகங்களுக்கு மத்தியில் எதிர்கால சந்ததியினைப் பாதுகாக்கும் போராட்டத்தில் இணைந்துள்ள புத்தளம் மக்களின் உணர்வுகளை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என பெரிய பள்ளிவாசல் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சமூகங்கள் மத்தியில் சிக்கல்களை உருவாக்க சில தீய சக்திகள் முயற்சிப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தகைய நபர்களிடம் சிக்கிக்கொள்ளாமல் சமயோசிதமாக மக்கள் செயற்பட வேண்டும் எனவும் புத்தளம் பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.