வருடாந்தம் 85,700 குழந்தைகள் உயிரிழப்பு

குடிநீர் தட்டுப்பாடு, சுகாதார சீர்கேட்டால் வருடாந்தம் 85,700 குழந்தைகள் உயிரிழப்பு: UNICEF தகவல்

by Bella Dalima 22-03-2019 | 4:55 PM
குண்டுகள் துளைத்து உயிரிழக்கும் குழந்தைகளை விட சுத்தமான குடிநீரின்றி உயிரிழக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமென UNICEF நிறுவனம் தெரிவித்துள்ளது. உள்நாட்டு மோதல்கள் இடம்பெறும் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாட்டினால் பெரும்பாலான குழந்தைகள் உயிரிழப்பதாக அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. 1993 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் உலக நீர் தினம் பிரகடனப்படுத்தப்பட்டதுடன், வருடாந்தம் மார்ச் 22 ஆம் திகதி உலக நீர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், உலகில் 663 மில்லியன் மக்கள் பருகும் குடிநீர் சுத்தமானதாக இல்லையென உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. குடிநீர் தட்டுப்பாடு மற்றும் சுகாதார சீர்கேடுகளால் 15 வயதிற்குட்பட்ட 85,700 குழந்தைகள் வருடாந்தம் உயிரிழப்பதாக UNICEF நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இவர்களில் 5 வயதிற்குட்பட்ட 72,000 குழந்தைகள் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான், பர்கினா பஸோ, கெமரூன், ச்சாட், எத்தியோப்பியா, ஈராக், லிபியா உள்ளிட்ட நாடுகளில் சுத்தமான குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.