மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை

மக்களவைத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை: மாயாவதி அறிவிப்பு

by Bella Dalima 20-03-2019 | 5:04 PM
இந்தியாவில் நடைபெறவுள்ள 17 ஆவது மக்களவைத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி இன்று அறிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் தான் வெற்றிபெறுவதை விட, உத்தரப்பிரதேசத்தின் அனைத்து தொகுதிகளிலும் பகுஜன் சமாஜ், சமாஜவாதி கட்சிக் கூட்டணி வெற்றிபெற வேண்டியது மிக அவசியம் என மாயாவதி குறிப்பிட்டுள்ளார். தான் போட்டியிடுதாக இருந்தால் கட்சிக்காரர்கள் அனைவரும் தனது ஒருவருடைய வெற்றிக்காக மட்டுமே கடுமையாக உழைப்பார்கள். அதனால் கட்சிக்கு நன்மை ஏற்படாது எனவும் அவர் கூறியுள்ளார். எனவே, கட்சியின் நலன் கருதி இந்த தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என அவர் அறிவித்துள்ளார். ஒருவேளை தேர்தலுக்குப் பின்னர் மக்களவை உறுப்பினராக வேண்டிய தேவை தனக்கு ஏற்பட்டால், கட்சியைச் சேர்ந்த ஒருவரை பதவி விலக அறிவுறுத்தி, அவரின் தொகுதியில் களமிறங்கி எளிதாக தன்னால் வெற்றி பெற முடியும் என்றும் மாயாவதி கூறியுள்ளார்.