by Staff Writer 20-03-2019 | 1:42 PM
Colombo (News 1st) வருடாந்தம் தமது நாட்டில் குடியேற அனுமதிக்கும் புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கையை அவுஸ்திரேலியா குறைத்துள்ளது.
இதனடிப்படையில், வருடாந்தம் அவுஸ்ரேலியாவிற்குள் அனுமதிக்கப்படும் புகலிடக்கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை சுமார் 15 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது.
அவுஸ்ரேலிய நகரங்களில் நிலவும் நெரிசலைக் குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இதனடிப்படையில், அவுஸ்ரேலியாவின் பெரிய நகரங்களான கன்பரா, மெல்பர்ன், பேர்த், சிட்னி மற்றும் கோல்ட்கோஸ்ட்டில் வசிப்பதற்கும் புதிய குடியேற்றவாசிகளுக்கு 3 ஆண்டு காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்ரேலியாவில் வீடுகளின் விலை அதிகரிப்பு மற்றும் சனநெரிசல் காரணமாக அதிகரித்துவரும் வாக்காளர்களின் ஏமாற்றத்தினைக் குறைக்கும் நடவடிக்கையாக பிரதமர் ஸ்கொட் மொரிசன் (Scott Morrison) இதனை மேற்கொண்டுள்ளார்.
சனத்தொகை அதிகரிப்பே இந்தப் பிரச்சினைகளுக்குக் காரணம் என அறியப்பட்டுள்ளதால், சனத்தொகையைக் கட்டுப்படுத்துவதற்காக இவை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கடந்த மாநிலத் தேர்தல்களில் பாரிய பின்னடைவினைச் சந்தித்த பிரதமர் ஸ்கொட் மொரிசன், தம்மீதான வாக்காளர்களின் நம்பிக்கையீனத்தைக் குறைக்கும் வகையில் இவ்வாறான சீர்திருந்தங்களை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.