ஜெனிவாவில் இலங்கை தொடர்பிலான அறிக்கை நாளை பரிசீலனை

by Staff Writer 19-03-2019 | 8:20 PM
Colombo (News 1st) இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் தயாரித்த அறிக்கை ஜெனீவாவில் நாளை (20) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் முதலாவது அமர்வின் போது நாளை இந்த அறிக்கை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக ஜெனிவாவிலுள்ள இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி அலுவலகம் தெரிவித்தது. 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி இலங்கை தொடர்பில் அமெரிக்கா தலைமையிலான நாடுகள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தீர்மானமொன்றை முன்வைத்தன. இந்த தீர்மானத்திற்கு இலங்கையும் இணை அனுசரணை வழங்கியது. இந்த தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கான கால அவகாசம் 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற மனித உரிமைகள் பேரவையின்போது இரண்டு வருடங்களால் நீடிக்கப்பட்டது. இதற்கமையே, இந்த தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட்டதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளர் நாளை முழுமையான அறிக்கையொன்றை வௌியிடவுள்ளார். இந்த அறிக்கைக்கு அமைவாக, இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் முன்னெடுக்கவுள்ள நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படவுள்ளன. இதேவேளை, இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பிலான பிரேரணையொன்றை பிரித்தானியா உள்ளிட்ட சில நாடுகள் இம்முறை கூட்டத்தொடரில் முன்வைக்கவுள்ளன. இந்த பிரேரணைக்கும் இலங்கை இணை அனுசரணையை வழங்கி, குறித்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக மேலும் இரண்டு வருட கால அவகாசத்தைக் கோருவதற்கு தயார் என அரசாங்கம் ஏற்கனவே அறிவித்துள்ளது.