by Staff Writer 19-03-2019 | 7:03 AM
Colombo (News 1st) நாட்டில் மின்சாரத் தடையின்றி, தொடர்ச்சியாக மின்விநியோகத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
செயலிழந்துள்ள நுரைச்சோலை லக்விஜய அனல்மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டாவது மின்பிறப்பாக்கியைத் திருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
நுரைச்சோலை லக்விஜய அனல்மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டாவது மின்பிறப்பாக்கி நேற்று மீண்டும் செயலிழந்தது.
இதனால் நாட்டின் பல பிரதேசங்களில் மின் விநியோகம் தடைப்பட்டது.
நுரைச்சோலை லக்விஜய அனல்மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டாவது மின்பிறப்பாக்கி நேற்று முற்பகல் 11 மணியளவில் செயலிழந்தது.
இதனால் 270 மெகாவோல்ட் மின்சாரம் தேசிய கட்டமைப்புடன் இணைக்கப்படவில்லை.
இதன்காரணமாக நாட்டின் மின்சார கேள்வியை பூர்த்திசெய்ய முடியாமல் போனதாக மின்சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஸன ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.
இந்த மின் உற்பத்தி நிலையத்தின் முதலாவது மின்பிறப்பாக்கி 2015 ஆம் ஆண்டிலிருந்து 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் திகதி வரை 495 நாட்கள் செயலிழந்துள்ளன.
இரண்டாவது மின்பிறப்பாக்கியும் திருத்தப்பணிகளுக்கு, நிறுத்தப்பட்டு கடந்த செப்டெம்பர் மாதம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.