by Staff Writer 18-03-2019 | 4:08 PM
Colombo (News 1st) நுரைச்சோலை அனல்மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நாட்டின் சில பகுதிகளில் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக, மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
மின் உற்பத்தி நிலையத்திலுள்ள இரண்டாவது மின்பிறப்பாக்கியில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஸன ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.
தொழில்நுட்ப கோளாறை சீர்செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இன்று முற்பகல் 11 மணியளவில் மின்பிறப்பாக்கி செயலிழந்தமையால் 270 மெகாவோல்ட் மின் உற்பத்திக்கு தடைப்பட்டுள்ளதாகவும் மின்சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதன்காரணமாக, நாடளாவிய ரீதியில் காணப்படும் மின்சாரத் தேவையை பூர்த்திசெய்வதற்கு முடியாமல் போனமையால், சில பகுதிகளுக்கான மின்சார விநியோகத்திற்கு தடை ஏற்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.