நியூஸிலாந்து தாக்குதல்: பிரதமருக்கு மின்னஞ்சல்

நியூஸிலாந்து தாக்குதல் குறித்து அந்நாட்டு பிரதமருக்கு மின்னஞ்சல்

by Chandrasekaram Chandravadani 17-03-2019 | 1:38 PM
Colombo (News 1st) நியூஸிலாந்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் குறித்து ஏற்கனவே தனக்கு மின்னஞ்சல் கிடைத்ததாக, அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் (Jacinda Ardern) தெரிவித்துள்ளார். இருவேறு வழிபாட்டுத் தலங்களில் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர், அந்த தாக்குதலை தொடுப்பதற்கு சுமார் 9 நிமிடங்களுக்கு முன்னர் அது குறித்த அறிக்கை ஒன்றை, தாம் உள்ளிட்ட 30 பேருக்கு மின்னஞ்சல் செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார். எனினும், குறித்த மின்னஞ்சலில், தாக்குதல் நடத்தப்படுவதற்காக குறிப்பிட்ட காரணமோ அல்லது நிகழ்விட தகவலோ குறிப்பிடப்படவில்லை எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார். அந்த மின்னஞ்சல் தனக்கு கிடைக்கப்பெற்ற 2 நிமிடங்களில் அது குறித்து பாதுகாப்புப் படையினருக்கு தெரியப்படுத்தப்பட்டதாகவும் பிரதமர் மேலும் கூறியுள்ளார். இதை ஒரு தீவிரவாதத் தாக்குதல் என்றே கூற முடியும் என தெரிவித்துள்ள பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன், தீவிரவாத எண்ணம் கொண்டவர்களுக்கு நியூஸிலாந்திலும் இந்த உலகத்திலும் இடமில்லை எனவும் கூறியுள்ளார். நியூஸிலாந்தில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது. இந்தநிலையில், நியூஸிலாந்து தாக்குதல்களில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள குறித்த நபர், தனிநபராக செயற்பட்டிருக்கலாம் என, பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.