தொடரை 5 - 0 என வெற்றியீட்டிய தென்னாபிரிக்க அணி

இலங்கைக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்கா வெற்றி

by Staff Writer 17-03-2019 | 7:41 AM
Colombo (News 1st) இலங்கையுடனான ஐந்தாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் வெற்றியீட்டிய தென்னாபிரிக்க அணி தொடரை 5 - 0 என்ற கணக்கில் வென்றிபெற்றுள்ளது. கேப் டவுன் நியூலேன்டஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தென்னாபிரிக்க அணி, டக்வர்த் லுயிஸ் அடிப்படையில் 41 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, ஓவர்களில் 49.3 ஓவர்களில் 225 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது. இலங்கை அணியின் முதல் இரண்டு விக்கெட்களும் 14 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டன. குசல் மென்டிஸ் மற்றும் ஏஞ்சலோ பெரேரா ஜோடி ஐந்தாவது விக்கெட்காக 62 ஓட்டங்களை பகிர்ந்து சற்று ஆறுதலளித்தது. குசல் மென்டிஸ் ஒருநாள் அரங்கில் 14 ஆவது அரைச்சதத்தை எட்டிய நிலையில் 56 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். ஏஞ்சலோ பெரேரா 31 ஓட்டங்களை பெற்றார். பகலிரவு ஆட்டமாக நடைபெற்ற போட்டியில், போதிய வௌிச்சமின்மையால் போட்டி சிறிது நேரம் தடைப்பட்டது. மீண்டும் போட்டியை ஆரம்பிப்பதற்கு முயற்சித்தபோதிலும், அந்த முயற்சியும் தோல்வியில் முடியவே போட்டியை கைவிடுவதற்கு நடுவர்கள் தீர்மானித்தனர். இதன்படி, போட்டியில் டக்வர்த் லுயிஸ் அடிப்படையில் தென்னாபிரிக்க அணி 41 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. போட்டி இடைநிறுத்தப்படும் வரை தென்னாபிரிக்க அணி 28 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 135 ஓட்டங்களை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.