எம்பிலிப்பிட்டிய பிரதேச சபை தலைவர் பதவி நீக்கம்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எம்பிலிப்பிட்டிய பிரதேச சபை தலைவர் பதவி நீக்கம்

by Staff Writer 16-03-2019 | 5:51 PM
Colombo (News 1st) இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில், ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றிய எம்பிலிப்பிட்டிய பிரதேச சபையின் தலைவர் எம்.கே. அமில, தலைவர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சட்ட மா அதிபரின் பரிந்துரைக்கு அமைய, நேற்று (15) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்நாயக்க குறிப்பிட்டார். இதற்கான கடிதத்தை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் கூறினார். தலைவர் பதவிக்கான மாற்றீடு தொடர்பில் பரிந்துரைக்குமாறும் செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கோரப்பட்டுள்ளதாக சமன் ரத்னாயக்க தெரிவித்தார். சில வருடங்களுக்கு முன்னர் மித்தெனிய பகுதியிலுள்ள காவலரணில் கடமையாற்றிய இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மோட்டார் சைக்கிளொன்றை சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். இந்த விடயம் தொடர்பில் எம்பிலிப்பிட்டிய பிரதேச சபையின் தலைவருக்கு தகவல் வழங்கியதை அடுத்து, அவர் சம்பவ இடத்திற்கு சென்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளார். தாக்குதலுக்கு இலக்கான இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் எம்பிலிப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றமை குறிப்பிடத்தக்கது.