ரவூஃப் ஹக்கீமின் செயற்பாடுகளுக்கு க.கோடீஸ்வரன் அதிருப்தி

by Staff Writer 15-03-2019 | 7:47 PM
Colombo (News 1st) அமைச்சர் ரவூஃப் ஹக்கீமின் செயற்பாடுகளுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் அதிருப்தி வௌியிட்டார். 2019 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் மீதான மூன்றாம் நாளுக்குரிய குழுநிலை விவாதம் இன்று நடைபெற்ற போது, அவர் அமைச்சர் மீதான தனது அதிருப்தியை வௌிப்படுத்தினார். அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ் பிரதேசங்களுக்கு அமைச்சர் ரவூஃப் ஹக்கீம் என்ன உதவிகளைச் செய்தார் என க.கோடீஸ்வரன் இதன்போது கேள்வி எழுப்பினார். அயலில் இருக்கும் அனைவருக்கும் நீர் வழங்கப்படுகின்ற போதும், தமிழ் மக்களுக்கு நீர் விநியோகம் வழங்கப்படாதிருப்பதை துர்பாக்கிய நிலையாகத் தாம் கருதுவதாக க.கோடீஸ்வரன் குறிப்பிட்டார். ''நீங்கள் குறிப்பிட்டவொரு இனத்திற்கு அமைச்சர் அல்ல. நீங்கள் இந்நாட்டிற்குரிய அமைச்சர்,'' எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் சுட்டிக்காட்டினார். 2019 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 43 மேலதிக வாக்குகளால் கடந்த செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது. இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் உள்ளிட்ட11 பாராளுமன்ற உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்கினை பதிவு செய்திருந்தனர்.