கச்சத்தீவு திருவிழா ஆரம்பம்: இந்திய பக்தர்கள் படகுகள் மூலம் வருகை

by Staff Writer 15-03-2019 | 7:08 PM
Colombo (News 1st) வரலாற்று சிறப்புமிக்க கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழாவிற்கு இலங்கையிலிருந்து சுமார் 7,000 பக்தர்களும் இந்தியாவிலிருந்து சுமார் 2200 பக்தர்களும் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் பிரதான பஸ் நிலையத்திலிருந்து குறிகட்டுவானுக்கான பஸ் போக்குவரத்துகள் இன்று இடம்பெற்றதுடன், அங்கிருந்து படகு மூலம் பக்தர்கள் கச்சத்தீவிற்கு செல்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதேவேளை, கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழாவிற்கு இராமேஸ்வரத்திலிருந்து பக்தர்கள் படகு மூலம் வருகை தந்தனர். இந்தியாவின் தமிழகம், கர்நாடகம், ஆந்திரா மற்றும் கேரளா ஆகிய பகுதிகளிலிருந்து வருகை தந்த பக்தர்கள் இராமேஸ்வரத்திலிருந்து படகு மூலம் கச்சத்தீவிற்கு புறப்பட்டனர். இம்முறை கச்சத்தீவு திருவிழாவில் கலந்துகொள்வதற்காக சுமார் 2450 பக்தர்கள் பதிவு செய்துள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட்டின் இராமேஸ்வரம் செய்தியாளர் தெரிவித்தார்.