மொரட்டுமுல்ல துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழப்பு

by Chandrasekaram Chandravadani 14-03-2019 | 12:04 PM
Colombo (News 1st) பிலியந்தலை - மொரட்டுமுல்ல பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று (14ஆம் திகதி) காலை 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதேநேரம், குறித்த துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். மோட்டார்சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டில், குறித்த பகுதியிலுள்ள வீடொன்றின் முன்பாக நின்றுகொண்டிருந்த தந்தை மற்றும் அவரது மகனின் நண்பர் ஒருவருமே உயிரிழந்துள்ளதோடு, உயிரிழந்த குறித்த தந்தையின் மகன் காயமடைந்துள்ளார். இந்தநிலையில், துப்பாக்கிப் பிரயோகத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். மேலும், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த நபர், பஸ் ஒன்றின் உரிமையாளராவார். இந்தநிலையில், தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இந்தத் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.    

ஏனைய செய்திகள்