ஐ.தே.க-விற்கு எதிராக முற்போக்கு தேசிய முன்னணியொன்றை உருவாக்கும் முதற்கட்ட பேச்சுவார்த்தை ஆரம்பம்: தயாசிறி ஜயசேகர

by Bella Dalima 14-03-2019 | 9:02 PM
Colombo (News 1st) ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள், எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டனர். ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக விரிவான கூட்டமைப்பொன்றை உருவாக்குவதே இந்த சந்திப்பின் நோக்கமாகும். இரண்டு கட்சிகளிடையே இவ்வாறான கலந்துரையாடலொன்று உத்தியோகப்பூர்வமாக நடைபெற்ற முதல் சந்தர்ப்பம் இதுவாகும். கலந்துரையாடலில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர, கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும உள்ளிட்ட சிலர் கலந்துகொண்டிருந்தனர். இந்த கலந்துரையாடலின் பின்னர், ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக விரிவான முற்போக்கு தேசிய முன்னணியொன்றை உருவாக்கும் முதற்கட்ட பேச்சுவார்த்தை இன்று ஆரம்பமானதாகவும் எதிர்வரும் 21 ஆம் திகதி மீண்டும் கூடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.