மின்சார சபையில் இடம்பெற்ற ஊழல் வௌிக்கொணர்வு

மின்சார சபையில் இடம்பெற்ற ஊழல்: ஊழியர்கள் வௌிக்கொணர்வு

by Bella Dalima 14-03-2019 | 9:30 PM
Colombo (News 1st) இலங்கை மின்சார சபையில் இடம்பெறும் மற்றுமொரு மோசடி தொடர்பிலான தகவல்களை வெளிப்படுத்துவதற்காக இலங்கை சேவையாளர் சங்கம் இன்று ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தது. இதன்போது, சுமார் 50 இலட்சம் மின்சார நுகர்வோர் செலுத்தும் மின் கட்டணத்தில் 50 வீதத்திற்கும் அதிக ஊழல் மோசடி காணப்படுவதாகவும் இலங்கை மின்சார சபை ஊழியர்களின் ஊழியர் சேமலாப நிதியத்தில் 2600 மில்லியன் ரூபா, மத்திய வங்கி முறிகள் ஊடாக என்ட்ரஸ்ட் நிதி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் பல வருடங்களாகியும் அந்தப் பணத்திற்கு என்ன நேர்ந்தது என தெரியவில்லை எனவும் இலங்கை மின்சார சேவையாளர் சங்கத்தின் பிரதம செயலாளர் ரஞ்சன் ஜயலால் குறிப்பிட்டார். ஒவ்வொரு ஊழியருக்கும் ஓய்வின் பின்னர் கிடைக்க வேண்டிய நிதியில், ஒரு இலட்சத்திற்கும் அதிக நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் ஊழியர் நம்பிக்கை நிதியைத் தவிர, வழங்கப்படும் ஓய்வுக் கொடுப்பனவிலும் மத்திய வங்கியின் தலையீட்டில் முறிகள் ஊடாக 400 மில்லியன் அந்நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் இதனால் ஓய்வுக் கொடுப்பனவில் 14 மில்லியன் ரூபா 6 மாதங்களுக்கு ஒரு தடவை இல்லாமற்போய்க்கொண்டிருப்பதாகவும் ரஞ்சன் ஜயலால் சுட்டிக்காட்டினார். மேலும், ரஞ்சித் சியம்பலாபிட்டிய மின்சக்தி அமைச்சராக பதவி வகித்தபோது, மின்சார சபையில் தொழில்வாய்ப்பைப் பெற்றுக்கொள்ள அம்பாறையைச் சேர்ந்த அப்பாவி மக்கள் பணம் வழங்கியுள்ளதாகவும் இதனுடன் முன்னாள் அமைச்சர் ஒருவரின் பாதுகாப்பு அதிகாரி தொடர்புபட்டுள்ளதாகவும் ரஞ்சன் ஜயலால் வௌிப்படுத்தினார். இலங்கை மின்சார சபையில் தொழில் பெறுவதற்காக 3 இலட்சம் தொடக்கம் 5 இலட்சம் வரை கொடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அமைச்சர் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்காவிட்டால், அவ்வாறு பணம் கொடுத்த சுமார் 100 பேரை அடுத்த ஊடக சந்திப்பின்போது நிச்சயமாக அழைத்து வருவதாகக் கூறினார். நீதிமன்றத்தினால் சட்டப்பூர்வமற்றது என கூறப்பட்ட அரசாங்கத்தில், டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி அஜித் பி.பெரேரா சுமார் 1000 பேருக்கு தொழில் வாய்ப்பு வழங்கியதாகவும் இதன்போது 3 இலட்சம் முதல் 5 இலட்சம் வரை பெறப்பட்டதாகவும் ரஞ்சன் ஜயலால் குறிப்பிட்டார்.