வர்த்தகர்கள் கொலை: சந்தேகநபர்கள் விளக்கமறியலில்

ரத்கம வர்த்தகர்கள் கொலை: சந்தேகநபர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

by Staff Writer 13-03-2019 | 2:04 PM
Colombo (News 1st) ரத்கம வர்த்தகர்கள் இருவரின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 7 சந்தேகநபர்களும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். காலி பிரதம நீதவான் முன்னிலையில் சந்தேகநபர்கள் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபர்கள், வர்த்தகர்கள் இருவரையும் கொலை செய்தமைக்கான பல சாட்சியங்கள் கிடைத்துள்ளதாக அரச சிரேஷ்ட சட்டத்தரணி நீதிமன்றத்தில் இன்று அறிவித்துள்ளார். வர்த்தகர்கள் எரியூட்டப்பட்ட இடத்தில், சந்தேகநபர்கள் அணிந்திருந்த ஆடைகளும் எரிக்கப்பட்டிருந்ததாகவும் அதில் கிடைத்துள்ள தடயங்கள் மற்றும் கொலை செய்யப்பட்ட வர்த்தகர்களின் கையடக்கத் தொலைபேசிகள் ஆகியவற்றை அரச இரசாயன பகுப்பாய்விற்கு அனுப்பிவைப்பதற்கு அனுமதி வழங்குமாறு அரச சிரேஷ்ட சட்டத்தரணி மன்றில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்தக் கோரிக்கையை ஆராய்ந்த பிரதம நீதவான் அதற்கான அனுமதியை வழங்கியுள்ளார். வர்த்தகர்கள் இருவரின் கொலை தொடர்பில் தென் மாகாண விசேட குற்றவியல் விசாரணைப் பிரிவின் பிரதான பொலிஸ் இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டர், உப பொலிஸ் இன்ஸ்பெக்டர்கள் இருவர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபல் இருவர், வனப் பாதுகாப்பு திணைக்களத்தின் அதிகாரி ஒருவரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய செய்திகள்