போராட்டங்களே மாற்று நடவடிக்கைகளுக்கு காரணம்

மக்களின் போராட்டங்களே சர்வதேச சமூகம் மாற்று நடவடிக்கைகளை எடுக்கும் நிலைக்கு இட்டுச்சென்றுள்ளது: சி.வி.விக்னேஷ்வரன்

by Staff Writer 13-03-2019 | 9:41 PM
Colombo (News 1st) மக்களின் போராட்டங்களே இலங்கை தொடர்பில் சர்வதேச சமூகம் மாற்று நடவடிக்கைகளை எடுக்கும் நிலைமைக்கு இட்டுச்சென்றுள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார். ஐ.நா. தீர்மானத்தினை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றத் தவறி இருக்கின்ற நிலையில், இலங்கையை பாதுகாப்பு சபை ஊடாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்ல வேண்டும் என்றும் அல்லது சர்வதேச நியாயாதிக்கத்திற்கு உட்பட்ட தகுந்த பொறிமுறை ஊடாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருவதாக வட மாகாண முன்னாள் முதலமைச்சர் கூறியுள்ளார். அத்தோடு, ஐ. நா மனித உரிமைகள் சபை தனது அலுவலகத்தை இலங்கையில் திறந்து விசேட பிரதிநிதி ஒருவரையும் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளதாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட மக்களின் போராட்டங்களிலும் இந்தக் கோரிக்கைகளே விடுக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அடக்குமுறைகளுக்கு எதிரான தமிழ் மக்களின் போராட்டமும் நீதிக்கான போராட்டங்களும் இன்று எழுச்சி அடைந்துள்ளதாகவும் சி.வி.விக்னேஷ்வரன் குறிப்பிட்டுள்ளார். பெண்களும் இளம் சமுதாயத்தினரும் சாத்வீக வழிகளில் அடக்குமுறைகளுக்கு எதிராக கிளர்ந்தெழுந்து சமாதானத்தையும் நீதியையும் நிலைநாட்டிய பல உதாரணங்கள் உலக வரலாறுகளில் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் எதிர்வரும் 16 ஆம் திகதி முற்றவெளியிலும் 19 ஆம் திகதி மட்டக்களப்பிலும் நடைபெறவுள்ள போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.