காலத்தை இழுத்தடிப்பது இலங்கை அரசின் கபடத்தனத்தை வெளிப்படுத்துகிறது: ஐ.நா-வில் கஜேந்திரகுமார் உரை

by Bella Dalima 13-03-2019 | 9:12 PM
Colombo (News 1st) ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடரின் பொது விவாதத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உரையாற்றினார். 30/ 1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டதிலிருந்து அதற்கு இணை அனுசரணை வழங்கிய இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்ட தலைவர்களான ஜனாதிபதியும் பிரதமரும் குற்றவியல் நீதியையும் பொறுப்புக்கூறலையும் நிராகரித்து வருவதாக தனது உரையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டினார். இன அழிப்பினால் பாதிக்கப்பட்டவர்களோ குற்றவியல் நீதியையும் பொறுப்புக்கூறலையும் கோரி நிற்க, இன அழிப்பினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு மத்தியில் யாழ்ப்பாணத்தில் உரையாற்றிய பிரதமரோ மன்னிப்போம் மறப்போம் என வெளிப்படையாகக் கூறியதாக அவர் தெரிவித்தார். மேலும், நாடுகளை மையப்படுத்திய இலங்கை மீதான தீர்மானங்களை நியாயப்படுத்துவதற்கான முக்கிய காரணிகளான குற்றவியல் நீதியையும் பொறுப்புக்கூறலையும் தொடர்ச்சியாக இலங்கை அரசு நிராகரித்து வருகின்ற நிலையில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையானது பாதிப்படைந்த மிகப்பெரும்பான்மையான தமிழ் மக்களுக்கு, குற்றவியல் நீதியை வழங்க முடியாது என்பதை தெளிவாக எடுத்துக்காட்டுவதாகவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டார். தீர்மானத்தில் கூறப்பட்ட ஏனைய விடயங்களில் பெயரளவிற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை முன்னேற்றங்களாக காண்பிப்பதும், தாம் வழங்கிய உறுதிப்பாட்டை நிறைவேற்றாமல் காலத்தை இழுத்தடிப்பதும் இலங்கை அரசின் நேர்மையற்ற பண்பையும் கபடத்தனத்தையும் வெளிப்படுத்துகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.

ஏனைய செய்திகள்