மீண்டும் நிராகரிக்கப்பட்ட தெரேசா மேயின் ஒப்பந்தம்

இரண்டாவது தடவையாகவும் நிராகரிக்கப்பட்ட தெரேசா மேயின் ஒப்பந்தம்

by Chandrasekaram Chandravadani 13-03-2019 | 7:41 AM
Colombo (News 1st) ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வௌியேறுவது தொடர்பிலான தெரேசா மேயின் ஒப்பந்தம், பாராளுமன்றத்தில் இரண்டாவது தடவையாகவும் மேலதிக வாக்குகளினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. பிரெக்ஸிட் நடவடிக்கைக்கு இன்னும் 17 நாட்கள் மாத்திரமே உள்ள நிலையில் தெரேசா மேயின் ஒப்பந்தத் திட்டத்திற்கு மீண்டும் பகிரங்க எதிர்ப்பு வௌியாகியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் நடத்தப்பட்ட இது தொடர்பிலான முதலாவது வாக்கெடுப்புடன் ஒப்பிடுகையில், சிறிய வித்தியாசத்தில் 149 வாக்குகளினால் ஒப்பந்தம் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒப்பந்தங்கள் எதுவுமின்றி ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலக வேண்டுமா இல்லையா என்பது தொடர்பான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது. இதேவேளை, இந்த வாக்கெடுப்பு தோல்வியடைந்தால் பிரெக்ஸிட் நடவடிக்கை தாமதிக்கப்பட வேண்டுமா இல்லையா என்பது தொடர்பில் மற்றுமொரு வாக்கெடுப்பு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.