2019 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றில் நிறைவேற்றம்

by Bella Dalima 12-03-2019 | 6:12 PM
Colombo (News 1st) 2019 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது,  வரவு செலவுத் திட்டம் 43 மேலதிக வாக்குகளால்  நிறைவேற்றப்பட்டது. வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 119 வாக்குகளும் எதிராக 76 வாக்குகளும் அளிக்கப்பட்டன. தமிழ் தேசியக் கூட்டமைப்பு இம்முறையும் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தது. மக்கள் விடுதலை முன்னணி எதிராக வாக்களித்தது. 2019 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் கடந்த 5 ஆம் திகதி நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. மக்களை வலுவூட்டுதல், வறிய மக்களை பாதுகாத்தல், என்டர்பிரைசஸ் ஶ்ரீ லங்கா எனும் தொனிப்பொருளில் இந்த வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது. இம்முறை வரவு செலவுத் திட்டத்திற்கு அமைய, அரசாங்கத்தின் வருமானம் 2,464 பில்லியன் ரூபாவாகும். அரசாங்கத்தின் இந்த வருட செலவு 3,149 பில்லியன் ரூபாவாகும். வரவு செலவுத் திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான குழுநிலை விவாதம் நாளை (13) முதல் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி மாலை வரவு செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.