பொள்ளாச்சி: திருநாவுக்கரசின் பிணை மனு தள்ளுபடி

பொள்ளாச்சி ஆபாச வீடியோ விவகாரத்தில் திருநாவுக்கரசின் பிணை மனு தள்ளுபடி

by Chandrasekaram Chandravadani 12-03-2019 | 12:49 PM
Colombo (News 1st) இந்தியாவின் தமிழ்நாட்டில் பொள்ளாச்சி பகுதியில் பல பெண்களைத் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி, அவர்களை வீடியோ எடுத்துவந்த குழு சிக்கியுள்ளது. குறித்த குழுவைச் சேர்ந்த நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பேஸ்புக் மூலம் கல்லூரிப் பெண்களிடம் நட்பாகி, 'அவுட்டிங்' என்ற பெயரில் வெளியில் அழைத்துச்சென்று பலவந்தமாக ஆபாச வீடியோ எடுத்து, மிரட்டி பணம் பறித்து வந்த கும்பல் அண்மையில் கைது செய்யப்பட்டது. இந்தக் குழுவிடமிருந்து சுமார் 1500 வீடியோக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்திருந்தனர். கடந்த 24ஆம் திகதி பொள்ளாச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார் ஆகிய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் குழு, ஏராளமான பெண்களின் வாழ்க்கையில் விளையாடியுள்ளதோடு, அவர்களை ஆபாசப்படம் எடுத்துள்ளமையும் குறித்த நபர்களின் பின்னணியில் அ.தி.மு.க. உறுப்பினர்களின் வாரிசுகள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விடயத்திற்காக நடிகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களும் குரல்கொடுத்துவரும் நிலையில், சம்பந்தப்பட்ட 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே, தனது மகன் திருநாவுக்கரசுக்கு பிணை வழங்குமாறு கோரி அவரது தாயார், பொள்ளாச்சி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்தநிலையில், குறித்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடிசெய்து உத்தரவிட்டுள்ளது.