எதிர்வரும் தேர்தல் தொடர்பில் அல்ஜீரிய ஜனாதிபதி

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை - அல்ஜீரிய ஜனாதிபதி

by Staff Writer 12-03-2019 | 7:56 AM
Colombo (News 1st) வட ஆபிரிக்க நாடான அல்ஜீரியாவில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை என அந்நாட்டு ஜனாதிபதி அப்டெலாஸிஸ் போட்விலிக்கா (Abdelaziz Bouteflika) அறிவித்துள்ளார். அத்தோடு, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி நடைபெறவிருந்த ஜனாதிபதித் தேர்தல், ஒத்திவைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதுவரை, தேர்தலுக்கான புதிய திகதி அறிவிக்கப்படவில்லை என்பதுடன், அமைச்சரவை மிக விரைவில் மாற்றியமைக்கப்படுமென அப்டெலாஸிஸ் போட்விலிக்கா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, அல்ஜீரிய பிரதமர் அஹ்மட் ஒயாஹீயா (Ahmed Ouyahia), பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளதையடுத்து, உள்துறை அமைச்சர் நவுருதின் பெடோய் (Noureddine Bedoui) புதிய பிரதமராக பதவியேற்றுள்ளார். அல்ஜீரிய ஜனாதிபதியாக கடந்த 20 வருடங்கள் பதவி வகித்த, அப்டெலாஸிஸ் போட்விலிக்கா, ஐந்தாவது தடவையாகவும் தேர்தலில் களமிறங்குவதற்கு அந்நாட்டு மக்களால் கடும் எதிர்ப்பு வௌியிடப்பட்டது. எதிர்க்கட்சியினரால் ஒழுங்கு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டங்களின் போது, பலர் காயமடைந்ததுடன் முன்னாள் பிரதமரின் மகன் ஒருவரும் கொல்லப்பட்டார். 2013 ஆம் ஆண்டு முதல் பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி அப்டெலாஸிஸ் போட்விலிக்கா, ஐந்தாவது தடவையாகவும் தேர்தலில் போட்டியிடுகின்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை என அவர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.