பொரளை போக்குவரத்துப் பிரிவின் OIC காலமானார்

பம்பலபிட்டியில் விபத்துக்குள்ளான பொரளை போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி காலமானார்

by Staff Writer 10-03-2019 | 7:32 AM
Colombo (News 1st) கொழும்பு - பம்பலப்பிட்டியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த நிலையில் தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பொரளை பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி ஆனந்த சாகர சரத்சந்திர சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கடந்த 2 வாரங்களாக தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே, நேற்றிரவு அவர் உயிரிழந்துள்ளார். இவர் கடந்த 24 ஆம் திகதி கடமை நிமித்தம் மோட்டார்சைக்களில் பயணித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், அதிகாலை 4.30 மணியளவில் பம்பலப்பிட்டி புல்லஸ் சந்தியில் வைத்து டிபெண்டர் வாகனமொன்று மோதி தப்பிச்சென்றது. அதன்பின்னர், பொறுப்பதிகாரியை விபத்துக்குள்ளாக்கி தலைமறைவாகிய டிபெண்டர் வாகனம் பத்தரமுல்ல, பெலவத்த பகுதியிலுள்ள வீட்டிலிருந்து கண்டு பிடிக்கப்பட்டதுடன், 8 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேயின் மகன், கொழும்பு மாநாகர சபை உறுப்பினர் மற்றும் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் மகன் ஆகியோரும் அடங்குகின்றனர். எவ்வாறாயினும், 8 சந்தேகநபர்களில் 7 பேர் கடந்த 26 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர், பிணையில் விடுவிக்கப்பட்டனர். டிபெண்டர் வாகனத்தை செலுத்திய உதேஷ் ரத்னாயக்க எனும் நபர், நாளை வரை விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. விபத்தில் உயிரிழந்த 51 வயதான பொலிஸ் அதிகாரி 3 பிள்ளைகளின் தந்தையாவார். இவர் பொலன்னறுவையை சேர்ந்தவர் என்பதுடன், பொரலஸ்கமுவ பகுதியில் வசித்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.